×

அருமனை அருகே பூட்டிய வீட்டில் அமர்ந்த நிலையில் தொழிலாளி சடலம்

அருமனை, பிப். 6: அருமனை அருகே பூட்டிய வீட்டில், அமர்ந்த நிலையில் தொழிலாளி சடலம் மீட்கப்பட்டது. அருமனை  அருகே கடையால் அரகநாடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (40).  கூலித்தொழிலாளி. இவரது பெற்றோர் தற்போது உயிருடன் இல்லை. இதனால் நாகராஜன்  தனியாக வசித்து வந்தார். கூலி வேலைக்கு சென்று கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டி வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நாகராஜன்  உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே  கடந்த சில தினங்களாக அவர் வெளியே வரவில்லை. வீடும் பூட்டிய நிலையில்  காணப்பட்டது. இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம்  வீசியது. சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் நேற்றுமுன்தினம்  இதுகுறித்து கடையாலுமூடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ  இடம் விரைந்துவந்து கதவை தட்டி நாகராஜனை அழைத்தனர்.

 ஆனால் உள்ளே  எந்த சலனமும் இல்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது,  நாகராஜன் அமர்ந்த நிலையில் சடலமாக காணப்பட்டார். அவர் இறந்து சுமார் 8  நாட்கள் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் உடல்  உருக்குலைந்து அழுகிய நிலையில் ஈக்கள் மொய்த்து காணப்பட்டது. அதைத்தொடர்ந்து  போலீசார் சடலத்தை மீட்டு  ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி  மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது  குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Arumana ,house ,
× RELATED அருமனை அருகே கேரளாவில் இருந்து கழிவுகள் ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு