×

சேனம்விளையில் அரசு பஸ்களை சிறை பிடித்த 20 பேர் மீது வழக்கு

 

நாகர்கோவில், ஏப்.29: குளச்சல் சேனம்விளையில், அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டம் நடத்திய 20 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குளச்சல் அருகே உள்ள சேனம்விளை பகுதியில் இருந்து நாகர்கோவிலுக்கு இயங்கும் தடம் எண் 6 ஏ அரசு பஸ்சை முறையாக இயக்கக்கோரி நேற்று முன்தினம் சேனம்விளை சந்திப்பில் அந்த பஸ்சை சிறைப்பிடித்து பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே இருந்தவாறு முழு டிரிப்பும் இயக்க வேண்டும்.

அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து உறுதி அளிக்க வேண்டும். அதன் பின்னரே பஸ்சை விடுவிப்போம் என கூறி, சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் அந்த வழியாக வந்த மற்ற பஸ்கள், வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து குளச்சல் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சிறை பிடிக்கப்பட்ட பஸ்கள் விடுவிக்கப்பட்டன.

போக்குவரத்து அதிகாரிகள் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக, அரசு பஸ் டிரைவர் வினுசீலன் (52) என்பவர் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், சேனம்விளை சந்திப்பில் அரசு பஸ்சை வழி மறித்து தர்ணா செய்து, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக கூறி உள்ளார். இந்த புகாரின் பேரில் போராட்டம் நடத்திய 17 ஆண்கள், 3 பெண்கள் உள்பட 20 பேர் மீது, குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post சேனம்விளையில் அரசு பஸ்களை சிறை பிடித்த 20 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Senamvilai ,Nagercoil ,Kulachal Senamvlai ,Kulachal ,Dinakaran ,
× RELATED கொளுத்தும் கோடை வெயில்; முக்கடல் அணை நீர்மட்டம் 0.9 அடியாக சரிந்தது