ஊட்டி, பிப். 6: முதுமலை தெப்பக்காட்டில் வனத்துைற கட்டுப்பாட்டில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் இன்று (6ம் தேதி) துவங்குகிறது. இம்முகாமினை தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் துவக்கி வைக்கிறார். தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் கோயில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் நடத்தப்பட்டு வருகிறது. அதே சமயம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள டாப்சிலிப், முதுமலை தெப்பகாடு வளா்ப்பு யானைகள் முகாமில் உள்ள வளா்ப்பு யானைகளுக்கு அந்தந்த முகாம்களிலேயே நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டு வந்தது. முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காடு முகாமில் உள்ள வளா்ப்பு யானைகள் வனத்துறை ரோந்து பணிகளுக்காகவும், வனங்களை விட்டு வெளியேறும் காட்டு யானைகளை விரட்டுதல் மற்றும் பிடித்தல் போன்ற கும்கி பணிகளுக்காகவும், யானை சவாரிக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. கோயில் யானைகளுக்கான முகாம் நடைபெற்று முடிந்த நிலையில், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கான முகாம் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த முகாம் இன்று (6ம் தேதி) துவங்குகிறது. தெப்பக்காட்டில் உள்ள 2 குட்டி யானைகள் உட்பட 27 வளர்ப்பு யானைகளுக்கான நலவாழ்வு முகாமினை தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் துவக்கி வைக்க உள்ளார்.
48 நாட்கள் நடைபெறும் இம்முகாமில் கரும்புகள் மற்றும் பழவகைகள், ராகி, பாசிபயறு, சவனபிராசம், அஸ்தசூரணம், புரோட்டின் பவுடர்கள், மினரல்ஸ், வைட்டமின் பவுடர்கள், மஞ்சள்தூள், வெல்லம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட உள்ளன.
மேலும் யானைகள் எடைக்கேற்ப நடைபயிற்சி அளிக்கப்பட உள்ளன. நாள்தோறும் யானை ஒன்றுக்கு தலா 150 கிலோ பசுந்தீவனமும் வழங்கப்பட உள்ளன. சுற்றுலா பயணிகள் வழக்கம்போல் அனுமதிக்கப்படுவார்கள் என ெதரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முதுமலை புலிகள் காப்பக உள் மண்டல துணை இயக்குநர் செண்பகபிரியா கூறியதாவது:
முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெப்பக்காட்டில் வளர்ப்பு யானைகளுக்கான நலவாழ்வு முகாம் நாளை (இன்று) துவங்கி 48 நாட்கள் நடைபெற உள்ளது. நலவாழ்வு முகாமில் யானைகளுக்கு முழு ஓய்வு அளிக்கப்பட்டு அவைகளுக்கு மூலிகை உணவுகள், மருத்துவ சிகிச்சைகள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட உள்ளன. யானைகளின் எடைக்கேற்ப அவைகளுக்கு நடைபயிற்சி அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.