ஊட்டி: முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் பசுமை திரும்பியதால், விலங்குகள் சாலையோரங்களில் வலம் வருகின்றன. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கி.மீ., பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த சரணாலயத்தில் புலிகள் மட்டுமின்றி யானை, சிறுத்தை, கரடி, காட்டுமாடு, பல்வேறு வகையான மான்கள் மற்றும் பறவைகள் உட்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இது தவிர இந்த சரணாலயத்தில் விலை உயர்ந்த தேக்கு மற்றும் ஈட்டி மரங்கள் அதிகளவு உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள இந்த புலிகள் காப்பகம் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும் எல்லையில் அமைந்துள்ளது. இந்த முதுமலை புலிகள் காப்பகம் வழியாக தொரப்பள்ளி -கக்கநல்லா சாலை மற்றும் மசினகுடி - தெப்பகாடு ஆகிய இரு சாலைகள் செல்கின்றன.
இந்நிலையில் கூடலூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அவ்வப்போது நல்ல மழை பெய்தது. குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் அதிகளவு பெய்தது. தற்போதும் அடிக்கடி இப்பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் பசுமை திரும்பியது. இங்குள்ள நீரோடைகள், குளங்கள் மற்றும் குட்டைகள் நிரம்பியுள்ளன. மாயாற்றிலும் நீர் வரத்து உள்ளது. வனங்களிலும் பசுமை திரும்பியுள்ளதால் வன விலங்குகள் சாலையோரங்களில் உலா வருகின்றன. குறிப்பாக புள்ளி மான்கள் கூட்டங்களை அதிகம் காண முடிகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், முதுமலையில் வாகன போக்குவரத்து குறைந்துள்ளது. இதனால் வன விலங்குகள் சுதந்திரமாக சாலையோரங்களில் உலா வருவது குறிப்பிடத்தக்கது.