×

ஏரியூர் கிராமத்தில் எருது விடும் திருவிழா நிறுத்தம்

* பார்வையாளர்கள் ஏமாற்றம்

மாதனூர், ஜன.30: ஒடுகத்தூர் அடுத்த ஏரியூர் கிராமத்தில் நேற்று நடக்க இருந்த எருது விடும் திருவிழா மறுதேதி அறிவிப்புயின்றி நிறுத்தப்பட்டது. இதனால் பார்வையாளர்கள் ஏமற்றத்துடன் சென்றனர். அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் அடுத்த ஏரியூர் கிராமத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா நடத்தப்பட்டு வந்தது. அதன்படி அனுமதிப்பெற்று நேற்று எருது விடும் விழா நடத்தப்படுவதாக அனைத்து ஊர்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனை அறிந்த பார்வையாளர்கள் விழாவினை எதிர்பார்த்து இருந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் அந்த பகுதியை சேர்ந்த முன்னாள் வனக்காவலர் ராமலிங்கம் என்பவர் இறந்து விட்டதால், நேற்று நடக்க இருந்த எருது விடும் திருவிழா நிறுத்துவதாக வேப்பங்குப்பம் காவல் நிலையதிற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனை அறிந்த காவல்துறை உதவி ஆய்வாளர்கள் சீனிவாசன், பிரகாசம் நேற்று விடியற்காலை காலை 5 மணியில் இருந்து ஏரியூர் எருது விடும் விழாவிற்கு வந்தவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர்.

மேலும் ராமலிங்கம் அந்த பகுதியில் முக்கிய பிரமுகராகவும், விழா நடத்துபவர்களில் ஒருவராகவும், விழா தொடக்கம் இவர் வீட்டின் முன் இருந்து தான் நடக்க இருந்ததால் விழாவினை மறுதேதி அறிவிப்பின்றி நிறுத்தி வைக்கப்பட்டது பார்வையாளர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

Tags : Aruvaru ,festival ,Eriyur ,village ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...