×

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலரிடம், ஆண் காவலர் கடும் ரகளை

* காதல் தகராறு முற்றியதில் மோதல்

வேலூர், ஜன.30: காதல் தகராறில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலரிடம், ஆண் காவலர் கடும் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் நேற்று பெண் காவலர் ஒருவர் ஈடுபட்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த ஒரு வாலிபர், பெண் காவலரிடம் பேசிக் கொண்டு இருந்தார். திடீரென அங்கிருந்த நோட்டு புத்தகத்தை எடுத்து வீசிவிட்டு சத்தம் போட்டார். மேலும் அந்த பெண் காவலரிடம் தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தி கொண்டு இருந்தார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றியதில் அந்த பெண் காவலர் தனது உயர் அதிகாரிக்கு தகவல் கொடுப்பதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர், ‘நீ எஸ்பிக்கே சொன்னாலும் என்னை ஒன்றும் பண்ண முடியாது’ என ஆவேசமாக கூறி ரகளையில் ஈடுபட்டார்.

இதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து இருவரையும் சமாதானம் செய்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

வேலூர் அருகே பூட்டுத்தாக்கு கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. இவர் சென்னை ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் வேலூர் ஆயுதபடையில் பணிபுரியும் பெண் போலீஸ் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

பின்னர் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய ஏற்பாடு நடந்தது. ஆனால் அந்த ஆண்காவலர், பெண் காவலர் மீது முரட்டுத்தனமாகவும், மனரீதியாக துன்புறுத்தி வந்ததாகவும் தெரிகிறது. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த பெண் காவலர், அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆண் காவலர் பிரபு, பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலரிடம் தன்னை காதலிக்குமாறும், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறும் கூறி வற்புறுத்தி உள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து எஸ்பி அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பெண் காவலரும், அங்கு மேற்கொண்டிருந்த பாதுகாப்பு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

அந்த ஆண் காவலர் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ள எஸ்பி அலுவலகம் மூலம் சென்னை பெருநகர காவல்துறை அலுவலகத்துக்கு பரிந்துரை செய்யப்படும். கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலரிடம், ஆண் காவலர் தகராறு செய்தது தவறு. இதுகுறித்து பெண் காவலரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : guard ,office ,collector ,Vellore ,
× RELATED பெண் காவலர் பற்றி சர்ச்சையால் கைது...