×

பைக் மீது அரசு பஸ் மோதி பொறியியல் பட்டதாரி பலி

புதுச்சேரி, ஜன. 23:  புதுச்சேரி, சிருங்கேரி மடம் எதிரே பைக் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் பொறியியல் பட்டதாரி பாிதாபமாக இறந்தார்.   புதுச்சேரி வில்லியனூர் ஒதியம்பட்டு பள்ளிக்கூட தெருவை சேர்ந்த  ஆறுமுகம் மகன் சபரிநாதன் (23). பொறியியல் பட்டதாரியான இவர், 100 அடி ரோடு  கொக்கு பார்க் அருகிலுள்ள ஒரு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பயிற்சி  ஊழியராக பணியாற்றி வந்தார். இதற்காக நேற்று அதிகாலை 5.45 மணியளவில்  வீட்டிலிருந்து வழக்கம்போல் தனது பைக்கில் சபரிநாதன் வேலைக்கு புறப்பட்டு  வந்தார். அவர் மரப்பாலம் வழியாக இந்திராகாந்தி சிக்னலை கடந்து முருகா  தியேட்டர் நோக்கி வேகமாக வந்த நிலையில், அவருக்கு பின்னால் புதுவையில்  இருந்து சென்னை நோக்கி வந்த தமிழக அரசு பேருந்து சிருங்கேரி மடம் எதிரே  வலதுபுறமாக அவரை கடந்துள்ளது.

 அப்போது எதிர்பாராதவிதமாக பஸ்  சபரிநாதனின் பைக் மீது உரசிய நிலையில் பைக்கில் இருந்து தடுமாறி கீழே  விழுந்த சபரிநாதனின் தலை மீது பஸ்சின் பின்சக்கரம் ஏறி இறங்கியது. இதில்  சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் அவர் துடிதுடித்த நிலையில், பொதுமக்கள்  அவரை மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். அங்கு சிறிதுநேரத்தில் சபரிநாதன் பரிதாபமாக இறந்தார். இந்த  விபத்து குறித்து புதுச்சேரி வடக்கு போக்குவரத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர்  வரதராஜன், எஸ்ஐ ராமமூர்த்தி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். சபரிநாதன் ஹெல்மெட் அணிந்து பைக்  ஓட்டியிருந்தால் உயிரிழப்பை தடுத்து இருக்கலாம் என போலீசார் வேதனையுடன்  தெரிவித்தனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...