கூடலூர், ஜன. 22: கூடலூரில் மைசூர் சாலையிலுள்ள நீதிமன்றம் முன்பாக வழக்குரைஞர்கள் ஒன்றரை வருடங்களாக காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்பக்கோரி 20ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு பகலாக இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அரசியல் கட்சியினர் வாழ்த்தி ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கூடலூர் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் வாசு, ஏரியா கமிட்டி செயலாளர் குஞ்சு முகமது, பாஜக மாவட்ட செயலாளர் சந்திரன் உள்ளிட்ட பலர் நேரில் சென்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினர். நீலகிரி மாவட்ட மற்றும் மாநில வழக்குரைஞர்கள் சங்கங்கள் அனைத்தும் தங்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என போராட்ட குழு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.