×

ஊட்டியில் மாணவர்களுக்கான 15 நாட்கள் கோடைகால பயிற்சி முகாம் துவக்கம்

ஊட்டி, ஏப்.30: ஊட்டியில் 10 முதல் 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 15 நாட்கள் கோடைகால பயிற்சி முகாம் துவங்கியுள்ளது. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். ஆண்டுதோறும் பள்ளிகளில் தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடும்போது, மாணவ, மாணவிகள் விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் வகையில் பல்வேறு கோடைகால விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நீலகிரி மாவட்ட பிரிவு சார்பில் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகளை ஊக்குவித்து அவர்களின் திறமைகளை வெளி கொண்டு வரும் வகையில் 10 முதல் 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் நேற்று ஊட்டியில் துவங்கியது.

எச்ஏடிபி திறந்த வெளி விளையாட்டு அரங்கத்தில் துவக்க நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா தலைமை வகித்தார். இப்பயிற்சி முகாம் மே 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஊட்டி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 180க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். இப்பயிற்சி முகாமில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து விளையாட்டிற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஹாக்கி போட்டிக்கான பயிற்சி குன்னூர் அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடக்கிறது. இப்பயிற்சி முகாம் காலை 6 மணியில் இருந்து 8 மணி வரையும், மாலை 4.30 மணியில் இருந்து 6.30 மணி வரையும் நடைபெறும். சிறந்த பயிற்றுநர்களை கொண்டு இப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி முடிவில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

The post ஊட்டியில் மாணவர்களுக்கான 15 நாட்கள் கோடைகால பயிற்சி முகாம் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,
× RELATED ஊட்டி நகர் பகுதியில்...