கிருஷ்ணகிரி, ஜன.20: கிருஷ்ணகிரியில் நடந்த எருது விடும் திருவிழாவில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருவிழாவையொட்டி எருது விடும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதற்காக, கிராமங்களில் வளர்க்கப்படும் கோயில் காளைகள் ஒரு இடத்திற்கு அழைத்து வரப்பட்டு, பூஜைகள் செய்த பின்னர் காளைகள் களத்தில் விடப்படும். அதன்படி நேற்று, கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலை மேம்பாலம் அருகில் உள்ள கோயில் மைதானத்தில் எருது விடும் திருவிழா நடந்தது. இதில், கிருஷ்ணகிரி கீழ்புதூர், ஆனந்த் நகர், பெருமாள் நகர், மோட்டூர் ஆகிய கிராமங்களில் இருந்து கோயில் காளைகள் அழைத்து வரப்பட்டு அவிழ்த்து விடப்பட்டது.
காளைகளின் முன் இளைஞர்கள் உறிபொம்மையை காட்டி உசுப்பேற்றினர். அதை கண்டு மிரண்டு ஓடிய காளைகளை இளைஞர்கள் பிடித்தனர். எருதாட்ட விழாவை காண கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வந்திருந்தனர். நிகழ்ச்சியின் போது அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க, கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.