திட்டக்குடி, ஜன. 20: ராமநத்தத்தை அடுத்துள்ள ம.பொடையூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன் சந்திரபோஸ்(19). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக் பாடப்பிரிவில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று சந்திரபோஸ், அவரது நண்பர்கள் விஜயகாந்த், அருள்முருகன் ஆகியோருடன் ஒரு பைக்கில் ஆவட்டியில் இருந்து மங்களூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தனர். வாகனத்தை அருள்முருகன் ஓட்டி சென்றார். ம.பொடையூர் கிராம எல்லையில் வந்தபோது, குறுக்கே வந்த மாட்டின் மீது மோதுவதை தவிர்க்கும் பொருட்டு வாகனத்தை அருள்முருகன் வேகமாக திருப்பினார். இதில் பைக்கில் இருந்து தடுமாறி கீழே விழுந்த சந்திரபோஸ் தலையில் பலத்த காயமடைந்தார். அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து சந்திரபோசின் அண்ணன் சுபாஷ், ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.