×

கோலி விளையாட்டில் தகராறு மாநகராட்சி ஊழியருக்கு வெட்டு: வாலிபர் கைது

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை பரமேஸ்வரன் நகரை சேர்ந்தவர் சக்திவேல் (27). சென்னை மாநகராட்சியில் அலுவலக உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் மாலை அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (27), விஜய் (19) உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து, தண்டையார்பேட்டை ரயில்வே யார்டு பகுதியில் கோலி விளையாடினார்.

அப்போது, விஜய்க்கும், சக்திவேலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விஜய்யும், சதீசும் மறைத்து வைத்திருந்த கத்தியால் சக்திவேலை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர். வலி தாங்க முடியாமல் சக்திவேல் அலறி துடித்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த சக்திவேலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய்யை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பிய சதீஷை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...