பாப்பிரெட்டிப்பட்டி, ஜன.13: பாப்பிரெட்டிப்பட்டி அருகே, மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில், புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி நடந்தது. பாப்பிரெட்டிப்பட்டி அருகே, மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் தேசிய பசுமை படை மாணவர்கள் சார்பில், நேற்று புகையில்லா போகி பண்டிகை குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் தமிழ்தென்றல், பசுமை படை ஒருங்கிணைப்பாளர் குப்புசாமி, ஆசிரியர் செந்தில், உடற்கல்வி ஆசிரியர் சேகர் மற்றும் பிற ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு பேரணியில் புகையினால் ஏற்படும் பாதிப்புகளையும், அதை எவ்வாறு தடுக்க ேவண்டும் என்பதற்கான வழிமுறைகள் குறித்து கோசம் எழுப்பினர். இந்த பேரணி பொம்மிடி பேராட்சியின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.
தர்மபுரி: இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணி திட்டம் சார்பில், புகையில்லா போகி மற்றும் சமத்துவ பொங்கல் கொண்டாட வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை தலைமையாசிரியை செந்தமிழ்செல்வி தொடங்கி வைத்தார். பள்ளியில் தொடங்கிய பேரணி, ராஜா கவுண்டர் தெரு, பெருமாள் கவுண்டர் தெரு, அமுதம் காலனி, தர்மபுரி-சேலம் சாலை வழியாக மீண்டும் பள்ளியை சென்றடைந்தது. புகையில்லா போகியை கொண்டாடி சுற்றுச்சுழலை பாதுகாக்க வேண்டும். அனைவரும் சமத்துவ பொங்கலை கொண்டாட வேண்டும் என்பன போன்ற விழிப்புணர்வு பதாகைகளை மாணவர்கள் ஏந்தி சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கலைவாணன், உடற்கல்வி ஆசிரியர் தேவேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.