×

அரியலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த 20 நாட்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும்

அரியலூர், ஜன. 9: அரியலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த 20 நாட்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டுமென அலுவலர்களுடன் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் ரத்னா பேசினார். அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்குதல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் ரத்னா தலைமை வகித்து பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி அரியலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு நடத்த விரும்புபவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து மாவட்ட நிர்வாகத்தினர் மூலம் அரசிடம் அனுமதி பெற்று அதன்பின்னர் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்.

இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் குழுவினர் ஜல்லிக்கட்டு நடத்தப்படவுள்ள தேதிக்கு 20 நாட்கள் முன்பே மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம், ஜல்லிக்கட்டு தொடர்பாக கிராம கணக்கு புத்தகத்தில் பதியப்பட்டுள்ள விபரம் ஆகியவற்றை குறிப்பிட்டு கீழ்கண்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அனுமதி கேட்கும் இடத்தில் ஏற்கவே ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அனுமதி பெற்றதற்கான ஆவணங்கள், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின்போது ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் அதற்கு ஜல்லிக்கட்டு நடத்தும் குழுவினரே பொறுப்பு என்பதற்கான உத்தரவாத பத்திரம், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி காப்பீடு செய்யப்பட்டது தொடர்பான விபரங்களை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த ஆவணங்கள் அனைத்தும் சரி பார்க்கப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்து அரசாணை பெறப்பட்ட பின்னரே ஜல்லிக்கட்டு நடத்த சம்மந்தப்பட்ட குழுவினருக்கு அனுமதி வழங்கப்படும். அதன் பின்னரே ஜல்லிக்கட்டு தொடர்பான ஏற்பாடுகளை சம்மந்தப்பட்ட குழுவினர் மேற்கொள்ள வேண்டும். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிைய அரசாணை மற்றும் மாவட்ட நிர்வாகம் அனுமதி ஏதும் பெறாமல் நடத்துபவர்கள் மீது காவல்துறையின் மூலம் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி, மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் பெரியய்யா, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ஹமீது அலி, வருவாய் கோட்டாட்சியர்கள் பாலாஜி, பூங்கோதை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர், கால்நடை உதவி மருத்துவர்கள், அரியலூர் மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் மற்றும் உறுப்பினர்கள், தாசில்தார் முத்துலட்சுமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Ariyalur District ,
× RELATED அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி...