×

அனைத்து அரிசி பெறும் அட்டைதாரர்களும் பொங்கல் பரிசு பெற்றுக்கொள்ளலாம்

கிருஷ்ணகிரி, ஜன.8: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களும் பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்று பயனடையுங்கள் என கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக மக்கள் சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளக் கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் ரொக்க தொகை ரூ. ஆயிரம் ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்க தமிழக முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 4 லட்சத்து 95 ஆயிரத்து 368 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி நாளை (9ம் தேதி) தொடங்கி வருகிற 12ம் தேதி வரை நியாய விலைக்கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. 13ம் தேதி விடுபட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.
எனவே, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கும் வகையில் சிறப்பாக திட்டமிடப் பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த சந்தேகங்களுக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் அலுவலக தொலைபேசி எண். 04343-234677 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Tags : rice recipients ,Pongal ,
× RELATED குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா