×

பவானி அருகே தீ விபத்தில் குடிசை வீடுகள் எரிந்து நாசம்

பவானி, ஜன.3:  பவானி அருகே தீ விபத்தில் மூன்று குடிசை வீடுகள் எரிந்து நாசமானது. பவானி அடுத்துள்ள மைலம்பாடி, செங்காடு பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் மாரியப்பன் (24). அதே பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மனைவி நதியா (30). விவசாயக் கூலித் தொழிலாளர்களான இவர்களின் வீடுகளில் நேற்று முன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் தீ கொளுந்துவிட்டு எரியத் துவங்கியது. இதனால், மற்ற குடிசைகளுக்கும் தீ பரவியது. இதுகுறித்து, பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த நிலைய அலுவலர் காந்தி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்ததோடு, மற்ற குடிசைகளுக்கும் பரவாமல் தடுத்தனர்.

இந்த விபத்தில் வீடுகளில் இருந்த பொருட்கள், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட அரசு ஆவணங்கள், சான்றிதழ்கள் எரிந்து சாம்பலானது. இதேபோல், பவானியை அடுத்த வரதநல்லூர், அஞ்சுவல்லக்காடு பகுதியைச் சேர்ந்த நாச்சிமுத்து மகன் வள்ளியண்ணன் (37) என்பவரின் வீட்டில் நேற்று முன்தினம் இரவு எதிர்பாராமல் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற பவானி தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இதில், நெல் மூட்டை, உப்பு மூட்டைகள் மற்றும் உடமைகள் எரிந்து சாம்பலானது.

Tags : cottage houses ,Bhavani ,
× RELATED பாவங்களைப் போக்கும் பவானி அம்மன்