×

பொதுப்பணித்துறை அலுவலகத்தில் வாரிசுதாரர் ஊழியர்கள் மீண்டும் தர்ணா

புதுச்சேரி, டிச. 31: பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் வாரிசுதாரர் வவுச்சர் ஊழியர்கள் மீண்டும் தர்ணா போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணியில் இருக்கும்போது இறந்தவர்களின் வாரிசுதாரர்கள் 250 பேர் கடந்த 2014ல் வவுச்சர் ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டனர். இவர்களுக்கு தினக்கூலியாக ரூ.290 என்ற கணக்கில் 16 நாட்களுக்கு வேலை வழங்கப்பட்டது. இவர்கள் தங்களை விதிமுறைப்படி நிரந்தர ஊழியர்களாக பணியமர்த்த கோரி வருகின்றனர். இதற்கிடையே ஒரு நாள் சம்பளமான ரூ.290ல் இருந்து ரூ.200 ஆக குறைத்து சமீபத்தில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் ஆவேசமடைந்த பொதுப்பணித்துறை வாரிசுதாரர் வவுச்சர் ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் கடந்த 26ம் தேதி காலை பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சிறப்பு பணி அதிகாரி கார்த்திகேயனின் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். பணி நிரந்தரம், சம்பளத்தை குறைக்க கூடாது என்பதை வலியுறுத்தி இப்போராட்டம் நடந்தது.

தொடர்ந்து, சிறப்பு பணி அதிகாரி கார்த்திகேயன் சமரச பேச்சு நடத்தி, 2 நாளில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனை ஏற்று பிற்பகல் 3 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு ஊழியர்கள் கலைந்து சென்றனர்.2 நாள் ஆகியும் நடவடிக்கை எடுக்காததால் வாரிசுதாரர் வவுச்சர் ஊழியர்கள் நேற்று காலை மீண்டும் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தலைமை பொறியாளர் மகாலிங்கம் அறையினுள் தர்ணா போராட்டம் நடத்தினர். அவர்களிடம் தலைமை பொறியாளர் மகாலிங்கம், இன்று காலை 10 மணிக்கு வாருங்கள், இதுபற்றி பேசுவோம் என கூறியுள்ளார். ஆனால் ஊழியர்கள், அதுவரை இங்கேயே இருப்போம் என கூறியுள்ளனர்.இதுபற்றி தகவலறிந்த பெரியகடை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : successor staff ,Public Works Office ,Darna ,
× RELATED காதல் கணவரின் குடும்பத்தினர்...