தர்மபுரி, டிச.30: தர்மபுரி மாவட்டத்தில் பிடிஓ அலுவலகங்களில் தபால் ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கடந்த 27ம் தேதி முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபட்டுனர். மாவட்டத்தில், 2ம் கட்ட தேர்தல் இன்று(30ம் தேதி) நடக்கிறது. இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் தங்கது ஓட்டுக்களை தபால் மூலம் போடுவதற்கான விண்ணப்ப படிவம், ஏற்கனவே அனைவரிடமும் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் ஓட்டு போட வசதியாக, கடந்த 26ம் தேதியே அந்தந்த ஒன்றிய பிடிஓ அலுவலகங்களில் தபால் ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டன.
தர்மபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தபால் பெட்டியில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நேற்று விடுமுறையாக இருந்த போதும், தங்களது தபால் ஓட்டுகளை போட்டனர். இதேபோல் காரிமங்கலம், பாலக்கோடு உள்பட 10 ஒன்றியங்களிலும் தபால் ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. இது குறித்து பிடிஓ அலுவலக அதிகாரிகள் கூறுகையில், ‘அரசு ஊழியர்கள் தபால் ஓட்டுக்களை வாக்கு எண்ணிக்கை நாளான ஜனவரி 2ம் தேதி அன்று, வாக்கு எண்ணிக்கை நடப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு வரை செலுத்தலாம்,’ என்றனர்.