புதுச்சேரி, டிச. 30: முதல்வர் என்ற கண்ணியத்தை இழந்து எல்லை மீறி பேசுவதை மாற்றிக்கொள்ள வேண்டுமென முதல்வர் நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளார். இ-மெயில் மூலமாக முதல்வருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், கவர்னரான என்னையும், அரசியலமைப்பு அலுவலகமாக இருக்கும் ராஜ்நிவாசையும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி, தரக்குறைவாகவும் பேசுகிறார். கடந்த சில தினங்களாக எல்லைமீறி கண்ணியத்தை இழந்து பேசுகிறார். குற்றச்சாட்டுகளை கூறும்போது, அதை ஏற்காவிட்டால், அது குற்றம் சாட்டுபவருக்கே போய் சேரும் என புத்தர் கூறியதை நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது.
முதல்வர் அலுவலகத்துக்கான கண்ணியத்தை காப்பாற்றி கொள்ளுங்கள். ஆளுநர் மாளிகையை தாங்கள் மோசமாக பேசுவதை மக்கள் ஏற்கவில்லை. அத்தகைய மோசமான நடத்தையிலிருந்து நீங்கள் விலகிக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். துணைநிலை ஆளுநர் அலுவலகம் முற்றிலும் புதுச்சேரிக்கும் அதன் மக்களுக்கும் என்ன தேவை என்பதை உணர்ந்து செயல்படுகிறது. கருத்து வேறுபாடுகளை கண்ணியமான முறையில் கூற தயவுசெய்து தெரிந்து கொள்ள வேண்டும். கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை தர விரும்புகிறேன் என அதில் கூறியுள்ளார்.