திருச்சி, டிச. 25: திருச்சி மேலப்புதூர் மாணிக்கபுரம் விளையாட்டு மைதானத்தில் நேற்று குப்பை கழிவுகளை கொட்ட வந்த மாநகராட்சி வாகனத்தை பொதுமக்கள் சிறைப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி 47வது வார்டுக்கு உட்பட்ட மேலப்புதூர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆனால் இப்பகுதியில் அடிப்படை வசதிகளை மாநகராட்சி செய்து தரவில்லை. இப்பகுதியில் குடிநீர் தொட்டியில் கழிவுநீர் கலந்து கொசுக்கள் உற்பத்தியாகி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொற்று நோய்கள் ஏற்பட்டு பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மாசடைந்த குடிநீரை குடித்ததால் கடந்த வாரம் 7 மாத குழந்தைக்கு தொற்றுநோய் ஏற்பட்டு அறுவை செய்யப்பட்டு மீண்டு வந்துள்ளது. மழைக்காலங்களில் குண்டும், குழியுமாக உள்ள தெருக்களில் மழைநீர் தேங்கி கழிவுநீருடன் கலந்து வீடுகளுக்கு புகுந்து விடும். சமீபத்தில் பெய்த மழையால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
மேலும் இப்பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே இளைஞர்கள், சிறுவர்களின் விளையாட்டு மைதானம் இருந்தது. தற்போது இந்த மைதானத்தில், பல்வேறு பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள் வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் மைதானம் குப்பை மேடாக மாறிவிட்டது. குறிப்பாக நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட ஊசி மற்றும் மருந்து பொருட்கள் அதிக அளவில் கொட்டப்படுவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு ெதாற்று ஏற்பட்டு, டெங்கு காலரா, மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகிறது.
இது பற்றி மாநகராட்சி மேஸ்திரி காந்தியிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று காலை மாநகராட்சி ஊழியர்கள் வேறு பகுதியிலிருந்து மாநகராட்சி வாகனத்தில் எடுத்து வந்த குப்பை கழிவுகளை இங்கு கொட்ட வந்தபோது அப்பகுதி மக்கள் திரண்டு வந்து மாநகராட்சி வாகனத்தை முற்றுகையிட்டு சிறைப்பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த திமுக முன்னாள் கவுன்சிலர் துர்காதேவி அப்பகுதி மாநகராட்சி மேஸ்திரி காந்தியை செல்போனில் பலமுறை தொடர்பு கொண்டும் அவர் போனை எடுக்கவில்லை. இது குறித்து மாநகராட்சி ஆணையரிடம் புகார் அளிக்க பொதுமக்கள் சென்றனர். பொதுமக்கள் சிறைப்பிடிப்பு மற்றும் முற்றுகையால் குப்பையை கொட்டாமல் வாகனங்களை எடுத்துக்கொண்டு மாநகராட்சி பணியாளர்கள் அங்கிருந்து விரைந்து சென்று விட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.