தாம்பரம், டிச. 24:செங்கல்பட்டு மாவட்டம், பரங்கிமலை ஒன்றியம் திருவஞ்சேரி ஊராட்சி தாம்பரம் அருகே அமைந்துள்ளது. இங்குள்ள அகரம் தென் பிரதான சாலையில் 3000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. மேலும், இப்பகுதியில் அரசு பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனை, பஸ் நிறுத்தம், ஏற்றுமதி நிறுவனங்கள், கடைகள் ஆகியவை அமைந்துள்ளன. தாம்பரம், சேலையூர் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் இருந்து பொன்மார், மப்பேடு, அகரம், மதுரைப்பாக்கம், வெங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் அகரம்தென் பிரதான சாலை வழியாக பல்வேறு பணிகளுக்கு சென்று வருகின்றனர். இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஆனால், திருவஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து தினமும் குப்பை, கழிவுகளை சேகரிக்கும் துப்புரவு ஊழியர்கள், அதனை கொண்டு வந்து அகரம்தென் சாலையோரத்தில் கொட்டுகின்றனர். இதனால் சாலையோரம் சுமார் 500 அடி தூரத்துக் குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கின்றன.இந்த குப்பை கழிவுகள் காற்றில் சிதறி சாலையில் பரவுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் செல்கின்றனர். மழைக் காலங்களில் இந்த குப்பையில் தண்ணீர் கலந்து கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தியாகி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
மேலும், இந்த குப்பை கழிவுகளை துப்புரவு ஊழியர்கள் அடிக்கடி தீயிட்டு எரிப்பதால் அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அகரம் தென் பிரதான சாலையில் செல்லும் வாகனஓட்டிகள், பொதுமக்கள், குடியிருப்பு வீடுகளில் உள்ளவர்கள் என அனைவரும் கண் எரிச்சல், மூச்சு திணறல், சுவாச கோளறு ஆகியவற்றால் கடும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, குப்பை, கழிவுகளை நாய், பன்றி, மாடுகள் கிளறுகின்றன. இதில் அவைகளுக்குள் மோதல் ஏற்பட்டு சாலைக்கு ஓடிவந்து சண்டையிடுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து ஊராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் அவர்கள் கண்டுகொள்ளாமல் உள்ளனர் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும். அங்கு மீண்டும் குப்பை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.