தர்மபுரி, டிச.22: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அனைத்துக் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. தேர்தல் பார்வையாளர் ஆலோசனை நடத்தினார்.
தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தேர்தல் பார்வையாளர் ராஜேஷ் தலைமை வகித்தார். தர்மபுரி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மலர்விழி முன்னிலை வகித்தார். உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிகள், பிரசார விதிமுறைகள் மற்றும் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள வாக்குப்பதிவுக்கு மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில், திமுக மாநில நிர்வாகி கீரை விஸ்வநாதன், அதிமுக இலக்கிய அணி செயலாளர் தகடூர் விஜயன், காங்கிரஸ் நகர தலைவர் செந்தில்குமார் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.