×

மேட்டுப்பாளையம் நடூரில் சுவர் இடிந்து உயிரிழந்த 17 பேர் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்

கோவை, டிச. 17:   மேட்டுப்பாளையம் நடூரில் 17 பேர் பலியான சம்பவத்தில் அவர்களது குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தினார். மேட்டுப்பாளையம் நடூரில் கடந்த 2ம் தேதி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான சம்பவத்தில் சுவரின் உரிமையாளர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தலைமையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் திருமாவளவன் பேசியதாவது:- தமிழ்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் மீது பழிவாங்கும் எண்ணத்தால் போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும். மேட்டுப்பாளையத்தில் 17 தலித்கள் மரணத்திற்கு காரணமாக இருந்த சிவசுப்பிரமணியன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் தீண்டாமை சுவர், தீண்டாமை சாலை, தீண்டாமை நீர் நிலைகள், உணவகங்கள், கோவில், சுடுகாடுகள் போன்ற வடிவங்களை தடுத்து நிறுத்த வேண்டும். மேட்டுப்பாளையம் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். குடியுரிமை சட்டம் கண்டிக்கத்தக்கது. இதற்காக போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

சம்பவம் நடந்த இடத்தை திருமாவளவன் நேற்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார்.அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்கள் மீது குறிப்பாக நாகை திருவள்ளுவன் உட்பட தலைவர்கள் மீது தமிழக அரசு காவல்துறை மூலம் கைது நடவடிக்கையில் ஈடுபட்டதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. வீடுகளில் சுற்றுச்சுவர் கட்டுவது வழக்கமான ஒன்றுதான். தற்போது இடிந்து விழுந்த சுவர், முறையாக பாதுகாப்பு நடவடிக்கை இல்லாமல் கட்டப்பட்டது. வழக்கமாக, கருங்கல் வைத்து சுற்றுச்சுவர் கட்டும்போது பில்லர் அமைத்து சுவர் கட்ட வேண்டும். இடிந்து விழுந்த சுவர், பில்லர் வைக்காமல் கட்டப்பட்டதே விபத்துக்கு முக்கிய காரணம். இது திட்டமிட்டு நடந்த விபத்து இல்லை. அஜாக்கிரதையால் ஏற்பட்ட விபத்து. பாதிக்கப்பட்ட மக்கள், பழுதான சுற்றுச்சுவர் குறித்து பலமுறை வீட்டு உரிமையாளரிடம் புகார் தெரிவித்தும் அவர் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால்தான் விபத்து நடந்தது. கட்டிட உரிமையாளரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும். இந்த சம்பவத்தில் தமிழக அரசு நீதி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Tags : collapse ,Mettupalayam Nadur ,
× RELATED தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்த...