×

ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய நீலநிற டவுன் பேருந்துகள் இயக்கம்

கோவை, மே 16: கோவை மாநகரில் ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய, நவீன டிஜிட்டல் டிஸ்பிளே பொருத்தி வெளிர் நீலநிறத்திலான புதிய டவுன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களில் மகளிருக்கு கட்டணம் இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் சென்னை, விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி உள்பட 8 கோட்டங்கள் உள்ளன. இதில், 7,614 சாதாரண மற்றும் மகளிர் கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தவிர வரையறுக்கப்பட்ட நிறுத்தங்கள், சொகுசு பேருந்துகள், விரைவு பேருந்துகள் என 2,456 பேருந்துகளும், புறநகர், விரைவு என 8,628 பேருந்துகளும், மலைப்பகுதி 465, மாற்று பேருந்துகள் 1,404 உள்பட மொத்தம் 20,127 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 8 கோட்டங்களில் உள்ள பேருந்துகள் சீரமைக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, பச்சை நிறத்தில் இருந்த பேருந்துகள் மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட்டு பயன்பாட்டில் கொண்டுவரப்பட்டு உள்ளது.

இந்த மஞ்சள் நிற பேருந்துகளின் சீட்களும் மாற்றப்பட்டு புதுமைப்படுத்தப்பட்டது. இதன் தோற்றம், வசதி ஆகியவை பயணிகளை கவர்ந்துள்ளது. இந்நிலையில், மாநகரில் மகளிருக்கு கட்டணமின்றி இயக்கப்படும் பேருந்துகளின் நிறம் மாற்றப்பட்டு புதுபொழிவுடன் வெளிர் நீல நிறத்திலான பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வெளிர் நீலநிற மாநகர பேருந்துகளில் ஜிபிஎஸ், பேருந்து நிறுத்த அறிவிப்பு உள்ளிட்ட நவீன வசதிகள், கூடுதல் இடவசதியுடன் கூடிய இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசு போக்குவரத்து கழகம் கோவை சார்பில், காந்திபுரம் பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட வழித்தடங்களில் 602 டவுன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சிவப்பு நிறத்திலான சொகுசு பேருந்துகள் 180 ஆகும். மகளிர் இலவசமாக பயணிக்க கூடிய வகையில் 422 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும், மகளிருக்கான இலவச பேருந்துகளை அடையாளம் காணும் வகையில் முன், பின் பாதிகளில் பிங்க் நிறத்தில் டவுன் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது இந்த வகையான பேருந்துகள் வெளிர் நீல நிறத்தில் மாற்றம் செய்ய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முதற்கட்டமாக கோவைக்கு வெளிர் நீல நிறத்தில் 16 டவுன் பஸ்கள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக தற்போது 6 பஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய வெளிர் நீலநிற டவுன் பஸ்கள் தனியார் பேருந்துகளை விட ஸ்டைலாக இருப்பதாகவும், பேருந்து இருக்கையும், பேருந்தின் உட்பகுதியில் போதிய இடவசதி இருப்பதாகவும், ஏறுவதற்கும், இறங்குவதற்கும் எளிதாக இருப்பதாகவும் பயணிகள் தரப்பில் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை கோட்டத்தில் உள்ள 4 மண்டலங்களில் 43 பணிமனைகள் உள்ளது. இதில், 2,774 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கோவையில் 17 டெப்போ மூலமாக 602 டவுன் பேருந்துகளை இயங்கி வருகிறது. இவற்றில், 180 சொகுசு பேருந்துகளும், 442 மகளிருக்கான பேருந்துகளும் அடங்கும். இந்நிலையில், மகளிர் இலவசமாக பயணிக்கும் வகையில் புதிதாக வெளிர் நீலநிறத்திலான பேருந்துகள் தற்போது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக கோவைக்கு 16 பேருந்துகள் கொண்டு வரப்பட உள்ளன. இதில், தற்போது 6 பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அதன்படி, சிவானந்தா காலனி முதல் புலியகுளம் வழித்தடத்தில் இயக்கப்படும் 5ம் நம்பர் இரண்டு பேருந்துகள், வடவள்ளி முதல் ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் 1சி இரண்டு பேருந்துகள், பிரஸ்காலனி முதல் ரயில்நிலையம் வரை இயக்கப்படும் 32ஏ மற்றும் பேரூர் முதல் பீளமேடு பாலிடெக்னிக் வரை செல்லும் 2 நம்பர் பேருந்து ஆகிய 6 பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.

இந்த பேருந்துகளில் மகளிருக்கு கட்டணம் இல்லை என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த பேருந்தில் அதிநவீன டிஜிட்டல் டிஸ்பிளே மற்றும் பேருந்துகள் சென்று சேருமிடம், பயணிக்கும் வழி உள்ளிட்ட விவரங்கள் அறிவிக்கப்படுகிறது. பேருந்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. தற்போது, 6 பேருந்துகள் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில், மீதமுள்ள பேருந்துகள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய நீலநிற டவுன் பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Tamil Nadu Government Transport ,Town ,Dinakaran ,
× RELATED கோயம்பேட்டிலிருந்து...