புதுச்சேரி, டிச. 17: புதுவை லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுவை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகிற 23ம் தேதி புதுச்சேரி வருகிறார். இதையொட்டி லாஸ்பேட்டை ஏர்போர்ட் தளம் மற்றும் பல்கலைக்கழக பகுதியை டிஜிபி பாலாஜி வஸ்தவா நேற்று ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்நிலையில் புதுச்சேரி லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. ஜனாதிபதி வருகையையொட்டி சாலை விரிவாக்கத்திற்காக தேசிய நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி, காவல்துறையுடன் இணைந்து சாலையோர ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர்.
அப்போது அங்கு கடைகள் முன்பு இருந்த படிக்கட்டுகளை அதிகாரிகள் பொக்லைன் கொண்டு இடித்து அகற்றியதற்கு என்ஆர் காங்கிரஸ் பிரமுகர் புவனா என்ற புவனரட்சகன் தலைமையில் வியாபாரிகள், பொதுமக்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்ஐ கீர்த்தி தலைமையிலான போலீசார், ஜனாதிபதி வருகையையொட்டி இந்நடவடிக்கை தற்காலிகமாக எடுக்கப்படுவதாக கூறி அவர்களை சமாதானப்படுத்தினார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். அதன்பிறகும் அப்பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு
இருந்தனர். இச்சம்பவத்தால் சிறிதுநேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.