×

தோவாளை அருகே மலையில் பாறைகளுக்கு இடையே ஆண் சடலம் எலும்பு கூடாக கண்டெடுப்பு கொலை செய்து வீச்சா? போலீஸ் விசாரணை

ஆரல்வாய்மொழி, டிச.1: தோவாளை அருகே எலும்பு கூடான நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது. குமரி மாவட்டம் தோவாளை கீழபத்து சாஸ்தா கோயில் அருகே மலை உள்ளது. கிறிஸ்துமஸ் விழாவையொட்டி குடில் அமைப்பதற்கான தருவை புற்கள் இந்த மலையில் அதிகமாக உள்ளது. நேற்று மாலையில் இளைஞர்கள் சிலர் புல் அறுப்பதற்காக இந்த மலைக்கு சென்றனர். அப்போது மலையில் உள்ள பாறைகளுக்கு இடையே எலும்பு கூடான நிலையில் வாலிபர் ஒருவரின் சடலம் கிடந்தது. மண்டை ஓட்டையும், எலும்பு  கூடுகளையும் பார்த்த இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்து கீழே வந்து பொதுமக்களிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் செல்வம், சப் இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர். எலும்பு கூடான நிலையில் கிடந்தவர் வெள்ளை வேஷ்டியும், சட்டையும் அணிந்து இருக்கிறார். அவருக்கு 45 ல் இருந்து 50 வயது வரை இருக்கும் என கூறப்படுகிறது. பாறைக்கு இடையே எலும்பு கூடுகள் கிடந்தன. எனவே தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு எலும்பு கூடுகள் ஆய்வு செய்யப்பட்டன.

இறந்து 15 நாட்கள் வரை ஆகி இருக்கும் என கூறப்படுகிறது. இறந்தவர் தொடர்பாக ஏதாவது தடயங்கள் கிடைக்கிறதா? என்பதை போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் அந்த பகுதியில் மது பாட்டில்களை தவிர வேறு எதுவும் கிடைக்க வில்லை. இந்த பகுதி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி ஆகும். மது அருந்தவும், கஞ்சா புகைப்பதற்காகவும் அதிக இளைஞர்கள் வந்து செல்வார்கள். கஞ்சா வியாபாரிகள்,  திருட்டு மது வியாபாரிகளும் வருவது உண்டு. இப்படி வருபவர்கள் வெள்ளை வேஷ்டி, சட்டை அணிந்து இருப்பார்கள். எனவே  கஞ்சா, மது வியாபார மோதல் தொடர்பாக யாராவது கொலை செய்யப்பட்டு, பாறைகளுக்கு இடையே வீசப்பட்டு இருக்கலாமா? என சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கனவே ஆரல்வாய்மொழி மலை பகுதியில் கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. ஆரல்வாய்மொழி கண்ணுபொத்ைத மலையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். எனவே அதே பாணியில் இவரும் கொலை செய்யப்பட்டு இருக்கலாமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தவிர மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில், பலர் இந்த மலை பகுதியில் சுற்றி திரிவார்கள். எனவே அவ்வாறு சுற்றி திரிந்தவர்கள் தானாக இறந்திருக்கலாமா?  அல்லது யாராவது விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாமா? என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சுற்று வட்டார பகுதிகளில் யாராவது மாயமாகி கண்டுபிடிக்கப்படாமல் உள்ளார்களா? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது. தோவாளை அருகே மலையில் சடலம் எலும்பு கூடான நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : hill ,Dovalai ,
× RELATED ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே...