×

கொங்கணாபுரத்தில் கடை பூட்டை உடைத்து துணிகர கொள்ளை

இடைப்பாடி, நவ.28: கொங்கணாபுரத்தில், ஆயில் கடை பூட்டை உடைத்து ₹88 ஆயிரம் பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் வியாபாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொங்கணாபுரம் எருமப்பட்டி பூசாரிக்காடு பகுதியைச் சேர்ந்த அழகப்பன் மகன் குமரவேல்(48). இவர், சேலம் மெயின்ரோட்டில் ஆயில் விற்பனை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம், வியாபாரம் முடிந்து, கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை, மீண்டும் கடைக்கு வந்த போது, பின்புறம் இரும்பு ஷட்டர் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனை கண்டு திடுக்கிட்ட குமரவேல், கல்லாப்பெட்டியை பார்த்தார். அதில் வைத்திருந்த ₹88 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை. நள்ளிரவு நேரத்தில் வந்த மர்ம ஆசாமிகள், கதவை உடைத்து உள்ளே புகுந்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், கொங்கணாபுரம் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், எஸ்.ஐ. வசந்தி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். மேலும், அங்கு தடயவியல் நிபுணர்கள் ரேகைகளை சேகரித்தனர். இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது உள்ளூர் ஆசாமிகளா அல்லது வெளியூரில் இருந்து வந்து கைவரிசை காட்டிச் சென்றனரா என போலீசார் விசாரித்து வருகின்றனர். கடையின் பூட்டை உடைத்து ₹88 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி வியாபாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த சேலம் மெயின்ரோட்டில், போலீசார் இரவு ரோந்து பணியை முடுக்கி விட வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Venture robbery ,
× RELATED தனியார் நிதி நிறுவன ஊழியர்களை...