×

மண்டைக்காடு அருகே மாயமான ஜவுளிக்கடை உரிமையாளர் சடலமாக மீட்பு

குளச்சல், நவ. 28:மண்டைக்காடு அருகே மாயமான ஜவுளிக்கடை உரிமையாளர் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். மண்டைக்காடு  தாராவிளை பகுதியை சேர்ந்தவர் குமாரதாஸ்(42). இவர் மண்டைக்காடு சந்திப்பு  அருகே சொந்தமாக ரெடிமேட் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு  முதல் அவரை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும், உறவினர்கள், நண்பர்கள்  வீடுகளில் தேடியும் அவர் குறித்து எந்தவித தகவலும் இல்லை. இந்த  நிலையில் மணவாளக்குறிச்சி பெரியகுளம் எழுத்திட்டான்பாறை அருகே நேற்று காலை  அவரது பைக் மற்றும் ஆடைகள் காணப்பட்டன. மேலும் குளத்தில் குமாரதாஸ்  நிர்வாண நிலையில் இறந்து கிடந்தார். அவரது வலது கண் புருவத்தில் காயம்  ஏற்பட்டிருந்தது. மேலும் குளத்தின் கரை பகுதியில் மது பாட்டில்களும்  கிடந்தன. குமாரதாஸ் மது அருந்திவிட்டு குளிக்க சென்றபோது தவறி  விழுந்து இறந்தாரா? அல்லது அவரை யாராவது கொலை செய்து குளத்தில் வீசி  சென்றனரா என்பது தெரியவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்து வந்த  மணவாளக்குறிச்சி போலீசார் சடலத்தை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ  கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags : jewelery shop owner ,Mandakkadu ,
× RELATED மண்டைக்காடு கோயிலில் மின் விளக்கு தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு