குலசேகரம்,நவ.28 : சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் அமைப்பதை கண்டித்து சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் குமரியில் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் அமைக்கப்படுவதை கண்டித்து குலசேகரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் கலந்துகொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வனங்களை காப்போம் என்ற பெயரில் வனத்தை பாதுகாத்து, விவசாயத்தை செழிக்க செய்யும் விவசாயிகளை நசுக்க கூடாது. வன பாதுகாப்பு சட்டத்தில் இருந்து விளை நிலங்களுக்கும், குடியிருப்புகளுக்கும் விலக்கு அளிக்க வேண்டும்.பொது மக்களையும், விவசாயிகளையும் அச்சுறுத்தும் வகையில் வன விலங்குகள் மற்றும் விஷ பாம்புகளை உலாவவிடும் நயவஞ்சக செயலை தமிழக அரசு ைகவிட வேண்டும். விளை நிலங்களில் சாகுபடி செய்வதற்கு கிணறுகள் அமைத்து புனரமைப்பு பணிகள் செய்ய அனுமதி அளிக்க வேண்டும். தமிழக அரசு மத்திய வனத்துறையை காரணம் காட்டி இந்த பிரச்னைகளை தட்டி கழிக்கக்கூடாது. தமிழக அரசு உரிய பொறுப்பு ஏற்று விவசாயிகள் கோரிக்கை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையென்றால் இந்த போராட்டத்தை குமரி மாவட்டத்தோடு நிறுத்தாமல் ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் சென்னை கோட்டை முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் என்றார்.ராசிமணலில் தமிழக அரசு அணை கட்ட வேண்டும்தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் குமரி மாவட்ட பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ. பூமி பாதுகாப்பு சங்க கூட்டமைப்பு தலைவர் பத்மதாஸ், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் புலவர் செல்லப்பா உள்ளிட்டோர் நேற்று குமரி மாவட்ட கலெக்டரை சந்தித்து குமரி மாவட்டத்தில் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். பின்னர் பின்னர் பி.ஆர்.பாண்டியன் நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது: டெல்டா மாவட்டங்கள் முப்போகம் விளைந்த நிலையில் இன்று தண்ணீரின்றி ஒரு போகம் கூட விளைய முடியாத அளவில் தண்ணீர் பிரச்னை உள்ளது. காவிரியில் கர்நாடகம் 177 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிடுகிறது. இதில் மேட்டூர் அணையில் 94 டிஎம்சி தண்ணீர் மட்டுமே தேக்கி வைக்க முடிகிறது. இதர தண்ணீர் உபரியாக திறந்துவிடப்படுகிறது. இந்த தண்ணீரை தேக்கி வைத்தால் விவசாயத்திற்கு பயன்படுத்தாலம். இதற்கு ராசிமணலில் புதிதாக அணை கட்ட வேண்டும். அவ்வாறு அணை கட்டாமல் எந்த மாற்று திட்டங்களும் பயன் அளிப்பது இல்லை. கேரளம்-தமிழகம் இடையேயான நதிநீர் பிரச்னைகளில் இரு மாநில முதல்வர்களும் சந்தித்து பேசினர். குழு அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டங்களை ஏற்க முடியாது என்று கேரளம் கூறுவதாக செய்திகள் வந்துள்ளன. இது தமிழக-கேரளம் இடையேயான நல்லுறவை பாதிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.