சென்னை: கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் 8வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் செல்வி (60). தனது குடும்பத்துடன் 4வது மாடியில் வசித்து வருகிறார். ேநற்று முன்தினம் இரவு 9.40 மணிக்கு சமையல் செய்ய வீட்டின் காஸ் அடுப்பை செல்வி பற்றவைத்துள்ளார். பின்னர் தீயை சிம்மில் வைத்துவிட்டு குளியல் அறைக்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் சமையல் அறைக்கு வந்தபோது திடீரென காஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அப்போது சிமென்ட் மேற்கூரை காற்றில் பறந்தது. இந்த விபத்தில் செல்வி மீது தீ பரவியது. இவரது அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தனர்.
தகவலறிந்து வடபழனி, தி.நகர் பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். மேலும் அருகில் உள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. உயிருக்கு போராடிய மூதாட்டி செல்வியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு 44 விழுக்காடு தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கோடம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.