கொடைக்கானல், நவ. 27: கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அளவிலான ஒரு நாள் கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது, பல்கலைக்கழக துணைவேந்தர் வைதேகி தலைமை வகித்தார். புஷ்பராணி வரவேற்றார். இதில் தமிழகம் மற்றம் வெளிமாநிலங்களை சேர்ந்த 15 கல்லூரிகளில் இருந்து 350க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் ஆராய்ச்சி மேற்கொள்பவர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக ஆஸ்திரேலியாவில் உள்ள டீ கீன் பல்கலைக்கழக இணை பேராசிரியர் கேங் லீ கலந்து கொண்டு, சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்தில் பெருந்தகவு பகுப்பாய்வின் பங்களிப்பு குறித்து மாணவ, மாணவிகளிடம் உரையாற்றினார்.
தொடர்ந்து துணைவேந்தர் வைதேகி, பெண்களின் உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் அரிய வகையான தாவரங்கள் நல்ல முறையில் வளர்வதற்கு பெருந்தகவு பகுப்பாய்வு எந்தளவிற்கு உதவிகரமாக இருக்கும் எனவும் எடுத்துரைத்தார். மேலும் ஆஸ்திரேலியாவின் டீ கீன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து எவ்வாறு ஆராய்ச்சி மேற்கொள்ள போகிறோம் என எடுத்துரைத்தார். தொடர்ந்து பதிவாளர் சுகந்தி, பெருந்தகவு பகுப்பாய்வு தொழிற்நுட்பத்தில் முக்கியத்துவத்தை பற்றி உரையாற்றினார். ஏற்பாடுகளை கணிப்பொறி, கணிதத்துறை இணை பேராசிரியர்கள் விமலா, புவனேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.