திருச்சி, மார்ச் 1: திருச்சி மாவட்ட மைய நூலகத்தில், தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் தமிழறிஞர்களை சிறப்பிக்கும் இலக்கியக் கருத்தரங்கக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் ராசேந்திரன் வரவேற்றார். மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் தலைமை வகித்தார். திருச்சி கலெக்டர் சிவராசு பங்கேற்று தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் இலக்கியக் கருத்தரங்கினைத் தொடங்கி வைத்து, மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்பட்ட இலக்கியப் பேச்சுப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிப் பேசினார். தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் குறித்து கவிஞர் நந்தலாலா, தமிழ் உலகின் நாடகத் தந்தை பம்மல் சம்பந்தனார் குறித்து தமிழ்ச் செம்மல் வீ.கோவிந்தசாமி, மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் குறித்து உதவிப் பேராசிரியர் நீலகண்டன், பாடலாசிரியர் மருதகாசி குறித்து உதவிப் பேராசிரியர் முனைவர் பாஸ்கர் ஆகியோர் கருத்துரையாற்றினர். முதல்நிலை நூலகர் தனலெட்சுமி நன்றி கூறினார்.