×

சர்வாதிகாரம் நீடித்தால் அடிமையாகி விடுவோம்

புதுச்சேரி,  நவ. 26: மத்திய பாஜக அரசு ஜனநாயகத்தை மதிக்காமல் சர்வாதிகாரம் செய்யும்  நிலை நீடித்தால் அடிமையாக நம்மை மாற்றிவிடுவார்கள் என புதுவையில்  காங்கிரஸ் கட்சியின் பேரணியில் பங்கேற்ற மாநில தலைவர் நமச்சிவாயம் ஆவேசமாக பேசினார்.  மத்திய பாஜக அரசின் பொருளாதார நடவடிக்கைகளை கண்டித்து  புதுச்ேசரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று இருசக்கர வாகன பேரணி  நடைபெற்றது. குபேர் சிலையில் இருந்து தொடங்கிய இப்பேரணியை கட்சியின் தேசிய  செயலாளர் சஞ்சய் தத், மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் ஆகியோர்  கொடியசைத்து தொடங்கி வைத்தனர் இதில் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி,  கமலக்கண்ணன், துணை சபாநாயகர் பாலன், எம்எல்ஏக்கள் அனந்தராமன், ஜான்குமார்,  விஜயவேணி, ஜெயமூர்த்தி மற்றும் மாவட்ட, வட்டார நிர்வாகிகள், தொண்டர்கள் என  500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 இந்த பேரணி குபேர் சிலையில்  இருந்து புறப்பட்டு செஞ்சி சாலை, புஸ்சிவீதி, அண்ணா சாலை வழியாக நேரு  வீதியை சென்றடைந்தது. பின்னர் அங்கிருந்து மகாத்மா காந்தி வீதி, அஜந்தா  சிக்னல் வழியாக காமராஜர் சிலையை வந்தடைந்து அங்கிருந்து பெரியார் சிலை,  திருவள்ளுவர் சாலை, சுப்பையா சிலை, நெல்லித்தோப்பு, இந்திராகாந்தி சிலை  வழியாக ராஜீவ்காந்தி சதுக்கத்தில் முடிவுற்றது. பேரணியில் கட்சிக்  கொடியுடன் பங்கேற்ற காங்கிரசார் மத்திய அரசுக்கு எதிராக வழிநெடுகிலும்  கோஷமிட்டபடி சென்றனர். இதுகுறித்து நமச்சிவாயம் கூறுகையில், மத்திய  பாஜக அரசின் பொருளாதார நடவடிக்கை மற்றும் தவறான போக்கை கண்டித்து பேரணி  நடைபெற்றது. மகாராஷ்டிரா விவகாரத்தில் பாஜகவை உச்ச நீதிமன்றம்  கண்டித்துள்ளது. இது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது. அரசியலமைப்பு  சட்டம் மற்றும் ஜனநாயகத்தை மதிக்காமல் பாஜக அரசு சர்வாதிகார போக்கை  செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தொடர்ந்தால், நாம் எல்லோரும் இந்த  நாட்டில் பாஜகவின் அடிமையாக மாற்றப்படுவோம். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது, என்றார்.

Tags : dictatorship ,
× RELATED “நாட்டை சர்வாதிகார பாதையில் கொண்டு...