தர்மபுரி, நவ.26: தர்மபுரி அருகே ராகி ரகம் பையூர்-2ஐ பிரபலப்படுத்த வயல் விழா நடந்தது. இதில் 80க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். ஊட்டச்சத்து மிகுந்த இரவை மற்றும் மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற தானியப் பயிரான ராகியில், அதிக மகசூல் தரக்கூடிய ரகம் பையூர்-2. இந்த ரகத்தின் செயல்திறனை விவசாயிகளுக்கு எடுத்துரைக்கும் பொருட்டு, பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம், தர்மபுரி மாவட்டத்தில் 80 விவசாயிகளின் வயல்களில் முதல்நிலை செயல்விளக்கத் திடல்கள் தமிழ்நாடு புதுமை முயற்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது.
இதனை விவசாயிகளுக்கு இடையே பிரபலப்படுத்தும் நோக்கத்துடன், தர்மபுரி வட்டாரத்தில் அமைந்துள்ள குப்பூர் கிராமத்தில், விவசாயி பரிமளம் வயலில் வயல்விழா நேற்று நடந்தது. இந்த விழாவில், வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகம் தொடங்கி வைத்து பேசுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் மூலம், தானியப் பயிர்களில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகள் குறித்து பேசினார். மண்ணியல் துறை உதவி பேராசிரியர் சங்கீதா, உதவி பேராசிரியர் அய்யாதுரை, வேளாண்மை உதவி இயக்குனர் இளங்கோ மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.