×

ஆண் வாரிசு இல்லாததால் தாய்க்கு ஈமச்சடங்கு செய்த மகள் ஜோலார்பேட்டையில் நெகிழ்ச்சி சம்பவம்

ஜோலார்பேட்டை, நவ.26: ஜோலார்பேட்டை அருகே ஆண் வாரிசு இல்லாததால் தாய்க்கு மூத்த மகள் ஈமச்சடங்கு செய்த சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி தாமரைக்குளம் அரியான் வட்டத்தைச் சேர்ந்தவர் நாகன். இவரது மனைவி அஞ்சனாதேவி(90). இவர்களுக்கு மைக்கண்ணி(65), பாப்பாத்தி(63), காந்தா(58) என 3 மகள்கள் உள்ளனர். ஆண் வாரிசு இல்லை. இந்நிலையில் அஞ்சனாதேவியின் கணவர் நாகன் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் அஞ்சனாதேவி தனது 3 மகள்களையும் தன்னந்தனியாக வளர்த்து வந்தார். மேலும், தனக்கு ஆண் வாரிசு இல்லை என்பதால் மூத்த மகள் மைக்கண்ணியை ஆண் வாரிசு போல் வளர்த்துள்ளார். பின்னர் 3 மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்தார்.

அவர்கள் தங்கள் கணவருடன் குடும்பம் நடத்தி வருகின்றனர். மகள்களின் திருமணத்திற்கு முன்னதாக அஞ்சானாதேவி தனது மகள்களிடம், தான் இறந்து விட்டால் எனக்கு ஈமச்சடங்கு மற்றும் காரியத்தை நீங்கள் 3 பேர்தான் செய்ய வேண்டும் என கூறினாராம். இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக அஞ்சனாதேவி கடந்த 23ம் தேதி இரவு இறந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஊர் நாட்டாண்மை சென்றாயன், அவரது மகள்களிடம் சென்று உங்கள் தாயாருக்கு ஆண் வாரிசு இல்லை. இதனால் ஈமச் சடங்கை யாராவது ஆண்தான் செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளார். அதற்கு மூத்த மகள் மைக்கண்ணி, ‘எனது தாய், தான் இறந்த பிறகு ஈமச்சடங்கு காரியங்களை பெண் பிள்ளைகளாகிய நாங்கள்தான் செய்ய வேண்டும். அப்போதுதான் தனது ஆத்மா சாந்தி அடையும். எனவே தனது தாயாருக்கு ஈமச்சடங்கு செய்ய ஊர் சார்பாக எனக்கு அனுமதி தர வேண்டும்’ என கேட்டார்.

இதையடுத்து ஊர்மக்கள் கூடி பேசி ஈமச்சடங்கு செய்ய மூத்த மகளான மைக்கண்ணிக்கு அனுமதி அளித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் அஞ்சனாதேவி உடல் அவரது இல்லத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டது. அப்போது மூத்த மகள் மைக்கண்ணி தீ சட்டியை கையில் ஏந்தி சென்றார். அதன்பிறகு காளியம்மன் கோயில் அருகே உள்ள அஞ்சனாதேவிக்கு சொந்தமான நிலத்தில் அடக்கம் செய்தனர். மகன் செய்ய வேண்டிய அனைத்து ஈமச்சடங்குகளையும் தனது தாய்க்கு மூத்த மகளே செய்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags : heir ,Jolarpettai ,
× RELATED தி.மலை மக்களவை தொகுதிக்குட்பட்ட...