கிருஷ்ணகிரி, நவ.22: தாசரப்பள்ளி தூய சகாயமாதா நடுநிலைப்பள்ளிக்கு ₹2.10 லட்சம் மதிப்பிலான 37 பெஞ்ச், டெஸ்க்குகளை ஐவிடிபி நிறுவனர் நன்கொடையாக வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தாசரப்பள்ளியில் செயல்பட்டு வரும் அரசு நிதியுதவி பெறும் தூய சகாயமாதா நடுநிலைப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் பலரும் தற்போது உயர்ந்த நிலையில் இருக்கின்றனர். இந்த பள்ளியின் அடுத்தக்கட்ட வளர்ச்சியாக தரையில் அமரும் மாணவர்கள் பெஞ்சில் அமர 63 டெஸ்க் மற்றும் பெஞ்ச் வேண்டும் என பள்ளி நிர்வாகத்தினர் ஐவிடிபி நிறுவனத்தை அணுகி கேட்டனர். அவர்களின் கோரிக்கையினை ஏற்று ஐவிடிபி சார்பில் 37 பெஞ்ச் மற்றும் டெஸ்க் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது.
இதேபோல், ஓசூர் புதுக்கடை நிறுவனம் சார்பில் ₹1 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பில் 26 பெஞ்ச், டெஸ்க்குகளை வழங்கவும் ஒப்புக்கொண்டார். அதன்படி, இந்த பெஞ்ச், டெஸ்க் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் ‘தேவசகாயசுந்தரம் தலைமை வகித்தார். அருட்தந்தை ராபர்ட், புதுக்கடை நிறுவன நிர்வாக இயக்குநர் ஜான்பீட்டர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஐவிடிபி நிறுவன தலைவரும், ராமன் மகசேசே விருதாளருமான குழந்தை பிரான்சிஸ் பங்கேற்று, பெஞ்ச் மற்றும் டெஸ்க்குகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், ஐவிடிபி நிறுவனம் ஆரம்பித்த காலத்திலிருந்து தாசரப்பள்ளி கிராமத்துடன் உள்ள தொடர்பு குறித்தும், தொடர்ந்து இப்பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன் என்றும், ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடனும், மாணவர்கள் ஒழுக்கத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்க வேண்டும் என்றும் கூறினார். ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் பெலிக்ஸ் செய்திருந்தார். இதில் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், கிராம மக்கள் மற்றும் ஐவிடிபி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.