×

திருப்பரங்குன்றம் அருகே பாம்பன் நகரில் சாலை தடுப்புச்சுவர் சேதம்

திருப்பரங்குன்றம், நவ. 6: திருப்பரங்குன்றம் அருகே, பாம்பன் நகரில் சாலை தடுப்புச்சுவர் சேதமடைந்திருப்பதால், இரவில் வரும் வாகன ஓட்டிகள் அருகில் உள்ள கழிவுநீர் ஓடையில் கவிழும் அபாயம் உள்ளது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் அருகே பாம்பன் நகர் உள்ளது. மதுரை மாநகராட்சி 96வது வார்டுக்கு உட்பட்ட இந்த பகுதியில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றம், அவனியாபுரம் பகுதியில் இருந்து பாம்பன் நகருக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையோரம் கழிவுநீர் ஓடை செல்கிறது. இதற்காக தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்புச்சுவரில் ஒரு பகுதி சேதமடைந்து பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியவில்லை. பாம்பன் நகரிலிருந்து திருப்பரங்குன்றத்துக்கு மினி பஸ்கள், பள்ளி வாகனங்கள் செல்ல முடியவில்லை. பள்ளி செல்லும் மாணவ, மாணவியரும், வேலைக்குச் செல்லும் வேலையாட்களும் உரிய நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, மாநகராட்சி நிர்வாகம் பாம்பன் நகரில் சேதமடைந்த சாலைத் தடுப்புச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pampan ,Thiruparankundram ,
× RELATED பாம்பன் கடலோரப் பகுதியில் பரவி...