×

சாலையில் சென்ற தொழிலாளியை விரட்டிச் சென்று தாக்கிய எஸ்.ஐ.

களக்காடு, நவ. 5:  களக்காடு அடுத்த தம்பிதோப்பு இந்திரா காலனியை சேர்ந்தவர் சிதம்பரநாதன். கூலி தொழிலாளியான இவர் நேற்று இரவு களக்காடு பழைய பஸ்நிலையம் பகுதியில் சேரன்மகாதேவி சாலையில் அம்பேத்கர் சிலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.  அப்போது அங்கு வந்த களக்காடு காவல் நிலையத்தில் பணியாற்றும் எஸ்.ஐ. ஒருவர், வழிமறித்தாராம். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த எஸ்.ஐ. அருகே கிடந்த கட்டையால் சிதம்பரநாதனை தாக்கினார். இதையடுத்து சிதம்பரநாதன் அங்கிருந்து ஓட்டம்பிடித்த போதும், துரத்திச்சென்று கடுமையாக தாக்கினாராம். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், எஸ்.ஐ.யை தடுத்து நிறுத்தினர். இதனிடையே படுகாயமடைந்த சிதம்பரநாதன் மயங்கினார்.
 தகவலறிந்து விரைந்துவந்த களக்காடு போலீசார், அவரை மீட்டு களக்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து களக்காடு இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா, எஸ்.ஐ லிபி பால்ராஜ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : SI ,road ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...