தர்மபுரி, நவ.1: தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும், இந்தியாவின் இரும்பு மனிதராக போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் 144வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் வல்லபாய் பட்டேல் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். நல்லம்பள்ளி ஒன்றியம், உம்மியம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் உதவி திட்ட அலுவலர் வெங்கடேசன் கலந்துகொண்டு, சர்தார் வல்லபாய் பட்டேல் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
மேலும் இதுதொடர்பாக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். பின்னர் பள்ளி மாணவ, மாணவிகளின் உறுதிமொழி ஏற்பு, கவிதை மற்றும் கட்டுரை போட்டிகள் நடந்தது. சர்தார் வல்லபாய் பட்டேலின் வேடமணிந்து, மாணவர்கள் பேச்சுப் போட்டியில் பங்கேற்றனர். விழாவில், பள்ளியின் தலைமை ஆசிரியர் நரசிம்மன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.