உடுமலை, அக். 31: உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. இங்கு தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பஞ்சலிங்க அருவியில் குளித்துவிட்டு செல்கின்றனர். விடுமுறை நாட்களிலும், விசேஷ நாட்களிலும் கூட்டம் அதிகமாக இருக்கும்.மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழை காரணமாக, பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் அதிகளவில் கொட்டியது. இதனால் நேற்று முன்தினம் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடித்ததால், நேற்றும் யாரும் அருவிக்கு அனுமதிக்கப்படவில்லை. 2வது நாளாக தடை விதிக்கப்பட்டதால், பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் ஏமாற்றம் அடைந்தனர். தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கோயிலை வெள்ளம் சூழும் அபாயம் உள்ளது. தொடர்ந்து நீர்வரத்தை கண்காணித்து வருவதாகவும், வெள்ளப்பெருக்கு குறைந்ததும் குளிக்க அனுமதி வழங்கப்படும் என கோயில் நிர்வாகிகள் மற்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.