பாகூர், அக். 9: கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கலிவரதன்(36), கொத்தனார். இவரது தம்பி வீட்டில் உள்ள பூவரச மரத்தில் கம்பளி பூச்சி இருந்துள்ளது. இதை அவரது மனைவி காசியம்மாள் தீ வைத்து கொளுத்தியுள்ளார். அப்போது, அவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த ரவுடியான ராஜேஷ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜேஷ், காசியம்மாளை தாக்கி கீழே பிடித்து தள்ளியுள்ளார். இதை தட்டிக்கேட்ட கலிவரதனையும் கடுமையாக தாக்கியுள்ளார். படுகாயம் அடைந்த 2 பேரும் கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து கலிவரதன் கிருமாம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் ரவுடி ராஜேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.