ஊட்டி, அக். 2: ஊட்டி அரசு கலை கல்லூரி வன விலங்கு உயிரியல்துறை சார்பில் வன உயிரின வாரவிழாவை முன்னிட்டு, சுற்றுசூழல் பாதுகாப்பு தொடர்பாக மாணவர்களால் உருவாக்கப்பட்ட குறும்படங்கள் மற்றும் வன விலங்குகள் வருவதை முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் கண்டு பிடிக்கப்பட்ட புதிய தொழிற்நுட்பங்கள் குறித்த புத்தாக்க கண்காட்சி ஆகியவை நடந்தது. இணை பேராசிரியர் சனில் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி, வன விலங்கு உயிரியல்துறை தலைவர் பேராசிரியர் எபினேசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல துைண இயக்குநர் ஸ்ரீகாந்த், பழங்குடியினர் ஆய்வு மைய இயக்குநர் சுப்பிரமணியம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
இதில் வன விலங்கு உயிரியல்த்துறை மாணவ, மாணவியர்கள் ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வன விலங்குகள் நடமாட்டம் குறித்து பிரேத்யேகமாக உருவாக்கப்பட்ட மொபைல் ஆப், டிவி., உள்ளிட்ட சாதனங்கள் மூலம் தகவல் அளித்தல், வன விலங்குகளின் எடையை வைத்து ஊருக்குள் வர கூடிய தகவல்களை பொதுமக்களுக்கு அளித்தல், சாலையை கடக்கும் வன விலங்குகள் விபத்தில் சிக்குவதை தடுக்கும் தொழில்நுட்பம், தேனீக்களை பாதுகாக்கும் தொழில்நுட்பம் போன்றவைகள் குறித்து மாணவ, மாணவியர்கள் உருவாக்கிய கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. பின், அமேசான் காட்டு தீ குறித்து பேராசிரியர் மணிவண்ணன் உருவாக்கிய குறும்படம் மற்றும் மாணவர்கள் உருவாக்கிய குறும்படங்கள் திரையிடப்பட்டன. இதில் உதவி பேராசிரியர்கள் ராமகிருஷ்ணன், கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.