×

கீழ்செருவாய் ஊராட்சியில் பழுப்பு நிறத்தில் வந்த குடிநீர்

திட்டக்குடி, அக். 2: திட்டக்குடி அடுத்துள்ள கீழ்செருவாய் ஊராட்சிக்கு உட்பட்ட 3 மற்றும் 6வது வார்டுகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து வரும் குடிநீரை மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் சேமித்து அதிலிருந்து கீழ்நிலை தொட்டியில் தேக்கி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் பழுப்பு நிறத்தில் வந்தது.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அருகிலுள்ள வயல்வெளி பகுதிக்கு சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூய்மையான குடிநீர் வழங்கவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.

Tags :
× RELATED சிறுமி மாயம் போலீசில் புகார்