புதுச்சேரி, அக். 1: காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பிய பாஜக நிர்வாகிகளிடம் விருப்ப மனு பெறப்பட்டது. அதன்படி கல்வியாளர் விசிசி நாகராஜன் உள்ளிட்ட 11 பேரை அழைத்து நேர்காணலும் நடத்தப்பட்டது. அதன்பிறகு என்ஆர் காங்கிரஸ் போட்டியிட முன்வந்த நிலையில் பாலன் மற்றும் புவனா பாஜக அலுவலகம் சென்று ஆதரவு தர வேண்டுமென வலியுறுத்தினர். இதற்கிடையே என்ஆர் காங்கிரஸ் தங்கள் வேட்பாளர் புவனேஸ்வரன் என உறுதி செய்த நிலையில் கட்சியின் பொதுச்செயலாளரான பாலன் மற்றும் நந்தா சரவணன், சுகுமாறன் எம்எல்ஏ உள்ளிட்ட நிர்வாகிகள் பாஜக அலுவலகத்துக்கு விரைந்து சென்று தங்களது கட்சிக்கு ஆதரவு தர வேண்டுமென வலியுறுத்தினர்.இதுபற்றி கட்சியின் தேசிய தலைமையிடம் பேசிய பாஜக மாநில தலைவர் சாமிநாதன், மேலிட ஒப்புதலை பெற்று உடனடியாக பாஜகவின் ஆதரவை தெரிவித்தார். இதன்மூலம் இடைத்தேர்தலில் போட்டியிடும் முடிவையும் அக்கட்சி கைவிட்டது. இதேபோல் அதிமுக நிர்வாகிகளையும் என்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் தனித்தனியாக சந்தித்து ஆதரவு திரட்டினர்.