சிவகங்கை, அக்.1: சிவகங்கை அருகே மேலவாணியங்குடியில் சிவகங்கை கே.ஆர்.மேனிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடந்தது. ஒரு வாரம் நடந்த இம்முகாமில் கிராமத்தில் திருக்கோவில் உழவாரப் பணிகள், ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகத்தைச் சுத்தம் செய்தல், கோவில் ஊரணியை சுத்தம் செய்தல், கிராம மேல்நிலைத் தொட்டியைச் சுத்தம் செய்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாம் நிறைவு விழாவிற்கு தலைமையாசிரியர் பொக்கிஷம் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்டக் கல்வி அலுவலர் ராஜேந்திரன், நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் சீனிராஜன் ஆகியோர் பேசினர். முகாம் ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முரளிக்கண்ணன் செய்திருந்தார்.