×

காங்கயம், வெள்ளகோவிலில் உழவுப் பணிகள் தீவிரம்

காங்கயம்,அக்.1: காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளில் பரவலாக பெய்த மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் மானாவாரி நிலங்களில் உழவுப் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளில் கடந்த 10 நாட்களாகவே அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் விதைப்புக்கு போதிய அளவு மழை பெய்த நிலையில் சில பகுதிகளில் விதைப்புக்கு ஏற்ற மழை இதுவரையிலும் பெய்யவில்லை. இருப்பினும் விவசாயிகள் பரவலாக பெய்த மழையைப் பயன்படுத்தி மானாவாரி நிலங்களில் விதைப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கொள்ளு, நரிப்பயறு, பாசிப்பயறு, சோளம், மொச்சை, தட்டை, உளுந்து உள்ளிட்ட மானாவாரி பயிர்களை விதைப்பு செய்யத் தொடங்கியுள்ளனர். பெரும்பாலும் மேய்ச்சல் நிலங்களில் நரிப்பயறு, கொள்ளு, சோளம் ஆகிய பயிர்களைத்தான் விதைப்பு செய்வர்.

காரணம் இந்தப் பகுதிகளில் ஆடு, மாடுகளுக்கு தீவனமாக இந்தப் பயிர்கள் பயன்படுகிறது. விதைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் தானிய மண்டிகளில் மானாவாரி பயிர்கள் விதைவிற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு விதைப்பயிர்களின் விலையும் சற்று அதிகரித்துள்ளது. தற்போது நரிப்பயறு கிலோ ரூ.120, கொள்ளு ரூ.50, சோளம் ரூ.55, பாசிப்பயறு ரூ.110, தட்டைப்பயறு ரூ.90, உளுந்து ரூ.70 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுபற்றி விவசாயிகள் தரப்பில் கூறுகையில், ‘‘நடப்பாண்டு மழை பரவலாக பெய்தாலும் ஒரு சில பகுதிகளில் உழவுக்கு பற்றாக்குறையாகத்தான் உள்ளது. இருந்த போதிலும் விதைப்பு செய்து வருகிறோம். அடுத்த சில நாட்களில் போதிய மழை பெய்யுமானால் விதைத்த தானியங்களை அறுவடை செய்துவிடலாம். இல்லையெனில் முதலுக்கே மோசமாகத்தான் முடியும்,’’ என்றனர்.

Tags : Wellakovil ,
× RELATED வெள்ளகோவிலில் சினிமாவை மிஞ்சிய...