புதுச்சேரி, செப். 26: உழவர்கரை நகராட்சி, சுத்தமே சேவை- 2019 காந்தியின் 150வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, 60 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு திட மற்றும் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஜவகர்நகரில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது. இதனை உள்ளாட்சித்துறை இயக்குனர் மலர்கண்ணன் துவக்கி வைத்தார். காலையில், உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி நகராட்சி பணிகள் பற்றியும், புதுவை பல்கலைகழக உதவி பேராசிரியர் சுடலை திட மற்றும் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை குறித்தும், புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு வாரிய மூத்த பொறியாளர் ரமேஷ் மாசு கட்டுப்பாட்டு வாரிய பணிகள், பிளாஸ்டிக் பயன்பாடு தடை பற்றியும், உழவர்கரை நகராட்சி பொறியாளர் சிவக்குமார் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 குறித்தும், பொறியாளர் வெங்கடேசன் நீர்சேமிப்பு பற்றியும் வகுப்பு எடுத்தனர். மதியம், மாணவர்கள் குருமாம்பேட்டில் உள்ள வளமீட்பு பூங்காவையும், குளம் சீரமைப்பு பணிகளையும் பார்வையிட்டனர்.