×

பெண்ணிடம் தகராறு செய்த பிரச்னை வாலிபர் வெட்டிக் கொலை

சென்னை. செப்.24: வியாசர்பாடி பகுதியில் நடுரோட்டில் வாலிபர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர், 75வது பிளாக்கை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் ஜெகன் (24). நேற்று முன்தினம் இரவு சத்தியமூர்த்தி நகர் 68வது பிளாக் பகுதி வழியாக ஜெகன் நடந்து வந்தார். அப்போது அங்கு வந்த 3 பைக்கில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து ஜெகனிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டனர். இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. திடீரென அந்த கும்பல் அரிவாளால் ஜெகனை சரமாரி வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து ஜெகன் துடித்தார். இதையடுத்து கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. இதன்பிறகு அப்பகுதி மக்கள் சென்று ஜெகனை மீட்டு உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜெகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் எம்கேபி நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மனோன்மணி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஜெகனின் சடலத்தை கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் அதே பகுதியை சேர்ந்த மீன் வியாபாரி பாரதி என்ற பெண்ணுக்கும் ஜெகனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது அந்த பெண்ணை அரிவாளால் வெட்டினார். இதுகுறித்து போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, ஜெகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த ஜெகனை, அதே பகுதியை சேர்ந்த 6 பேர் கொண்ட ரவுடி கும்பல் வெட்டி கொன்றதாக தெரியவந்தது. எம்கேபி நகர் போலீஸ் உதவி கமிஷனர் அழகேசன் தலைமையில் தனிப்படை அமைத்து மர்ம கும்பலை தேடி வந்தனர். இந்த நிலையில், இக்கொலை தொடர்பாக நேற்று காலை 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags : Woman strikes ,murders ,
× RELATED எந்த விஷயத்தையும் நடத்தி காட்டுவேன்...