×

எந்த விஷயத்தையும் நடத்தி காட்டுவேன் எனக்கூறி ஒரே குடும்பத்தில் 4 பேர் உட்பட 21 கொலைகள் செய்த மந்திரவாதி: சொத்து, பணம் அபகரிப்பு

திருமலை: எந்த விஷயத்தையும் நடத்தி காட்டுவேன் எனக்கூறி ஒரே குடும்பத்தில் 4 பேர் உட்பட 21 பேரை கொலை செய்து சொத்து, பணம் அபகரித்த மந்திரவாதியை ஐதராபாத்தில் போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் நடந்த ஒரு கொலை வழக்கு தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதில் கர்னூலை சேர்ந்த மந்திரவாதி சத்யம்(42) என்பவர் கொலை செய்திருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரை பிடித்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மந்திரவாதி சத்யம் ஏற்கனவே 20 பேரை கொலை செய்ததாகவும், தற்போது 21வது நபரை கொலை செய்திருப்பதாகவும் தெரிகிறது.

சீரியல் கொலைக்காரனாக மாறியுள்ள சத்யம் திடீர் அதிர்ஷ்டம், வேலைவாய்ப்பு, திருமண தடை, சொத்து கைவசப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு மந்திரத்தால் பூஜை செய்து சரி செய்வதாகவும், எந்த விஷயத்தையும் நடத்தி காட்டுவதாகவும் கூறி பொதுமக்களை நம்ப வைத்துள்ளார். இதில் அதிகளவு சொத்து, பணம் வைத்திருப்பவர்களை கொலை செய்துள்ளார். பின்னர் அவர்களது சொத்து, பணம், நிலம் உள்ளிட்டவற்றை அபகரித்துள்ளார். இதில் வனபர்த்தி மாவட்டம், நாகப்பூர் கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கொலை செய்ததும் தெரியவந்ததால் போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஐதராபாத்தில் ஒருவரிடம் பணம் பறித்து கொண்ட நிலையில் வேலை கிடைக்காததால் அவர் கேள்வி கேட்டதால் அவரையும் கொன்றுள்ளார். இந்த கொலை வழக்கில் போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 21 பேரை கொலை செய்ததாக தெரியவந்துள்ள நிலையில், மேலும் பலரை கொலை செய்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post எந்த விஷயத்தையும் நடத்தி காட்டுவேன் எனக்கூறி ஒரே குடும்பத்தில் 4 பேர் உட்பட 21 கொலைகள் செய்த மந்திரவாதி: சொத்து, பணம் அபகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Thirumalai ,
× RELATED ஈஷா மையத்தில் பணியாற்றி காணாமல் போன 6...