சேலம், செப்.19:சேலம் ேநாட்ரி டேம் ஆஃப் ஹோலி கிராஸ் பள்ளியில் கலையரங்கம், உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா நேற்று நடந்தது.சேலம் உடையாப்பட்டி குண்டுக்கல்லூரில், நோட்ரி டேம் ஆஃப் ஹோலி கிராஸ் பள்ளி 11 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், மிகப்பெரிய அளவில் உள்விளையாட்டு அரங்கத்தோடு கூடிய கலையரங்கம் பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று (18ம் தேதி) நடந்தது. விழாவிற்கு திருச்சிலுவை சபையின் இந்தியத் தலைவர் ஜான்ஜோசப் முன்னிலை வகித்தார். புதிய கலையரங்கத்தை, திருச்சிலுவை சபையின் உலகத் தலைவர் ராபர்ட் லூயிஸ் எப்பிங் (ரோம்) அர்ச்சித்தார். அதனை தொடர்ந்து திருச்சிலுவை சபையின் உலகத் தலைவர் ஜேம்ஸ் ரிப்பன் கோம்ஸ், கலையரங்கத்தை திறந்து வைத்தார். திருச்சிலுவை சபையின் முன்னாள் இந்திய தலைவர் சேசுராஜ் கல்வெட்டினை திறந்து வைத்தார்.
திறப்பு விழாவில், திருச்சிலுவை சபையின் அருட்சகோதரர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பலவேறு பள்ளிகளின் முதல்வர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி மாணவ, மாணவியர், பெற்றோர்கள், முன்னாள் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். புதிய கலையரங்கம் 3000 மாணவர்கள் அமரக்கூடிய இடவசதி கொண்டது. மேலும் கூடைப்பந்து, கைப்பந்து, இறகு பந்து, பூப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு உள் விளையாட்டு அரங்கமாகவும் உள்ளது. அதிநவீன ஒலி, ஒளி அமைப்புடன் அமைக்கப்பட்டுள்ள இக்கலையரங்கம், மாணவர்களின் பன்முக திறமையை வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் பாலசாமி, நிர்வாகி சாக்கோ, கில்பர்ட் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.